Archives: ஆகஸ்ட் 2021

இயேசுவை பகிர்தல்

டுவைட் மூடி (1837-99) என்னும் சுவிசேஷகர் இரட்சிக்கபட்ட பின்னர், ஒரு நாளைக்கு ஒருவரிடத்திலாவது சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதில்லை என்று தீர்மானித்தார். வேலைப்பளுவின் நிமித்தம் சில வேளைகளில் அவருடைய தீர்மானத்தை வெகு தாமதமாய் நினைவுகூருவதுண்டு. அப்படித்தான் ஒரு நாள் அவர் படுக்கையிலிருக்கும்போது அவருடைய தீர்மானம் அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து வெளியே போனார். மழை பெய்யும் இந்த நள்ளிரவில் யாரும் இருக்கமாட்டார்களே என்று எண்ணினார். அங்கே சாலையில் குடையோடு நடந்துபோய்க் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பார்த்தார். வேகமாய் ஓடி, அவருடைய குடையில் தனக்கு அடைக்கலம் கேட்டார். அனுமதி கிடைத்ததும், “புயலின் நடுவில் தங்குவதற்கு உங்களுக்கு இடமிருக்கிறதா? நான் இயேசுவைக் குறித்து உங்களுக்கு சொல்லவா? என்று சுவிசேஷத்தை பகிரத் துவங்கினாராம். 

பாவத்தின் விளைவுகளிலிருந்து தேவன் நம்மை எப்படி இரட்சிக்கிறார் என்றும் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள மூடி எப்போதும் ஆயத்தமாயிருந்தார். அவருடைய நாமத்தையும், “அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்” (ஏசாயா 12:4) என்று இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு மூடி கீழ்ப்படிந்தார். இஸ்ரவேலர்கள் அழைக்கப்பட்டது “அவருடைய நாமம் உயர்ந்ததென்று” பிரஸ்தாபம்பண்ணுவதற்கு மாத்திரம் இல்லை, அத்துடன் சேர்த்து தேவன் எப்படி அவர்களின் இரட்சிப்பாய் மாறினார் (வச. 2) என்பதை அறிவிக்கவும் அழைக்கப்பட்டனர். நூற்றாண்டுகள் கழித்து, இன்று நாம் இயேசு மனிதனான ஆச்சரியத்தையும், சிலுவையில் மரித்து, உயிர்தெழுந்த சத்தியத்தையும் அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். 

மூடி செய்தது போல, யாரோ ஒருவர் துணிந்து நம்மிடத்தில் வந்து இயேசுவைக் குறித்து அறிவித்ததினாலேயே நாம் அவரின் அன்பைக் குறித்து கேள்விப்பட்டோம். நாமும் நம்மை இரட்சித்தவரைக் குறித்து நமக்குகந்த வழியில் மற்றவர்களுக்கு அறிவிக்கலாமே.

கிருபையும் இரக்கமும்

தேசிய நெடுங்சாலையின் நடுவில் இருந்த திட்டில் ஒரு சூரியகாந்தி பூ ஒன்று தனித்து ஓங்கி வளர்ந்திருந்தது. அதுவும் வேகப்பாதையின் மிக அருகாமையில் வளர்ந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த சூரியகாந்தி பூவும் தென்படாத பட்சத்தில், இந்த ஒற்றைப் பூவைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். நெடுஞ்சாலையின் நடுவில் இப்படியொரு செடியை தேவனால் மட்டுமே வளர்க்கமுடியும். அவ்வழியாய் அவசர அவசரமாய் கடந்து செல்லும் பயணிகளை புன்முறுவலோடு வரவேற்று, மென்மையாய் வழியனுப்பிக் கொண்டிருந்தது. 

அதைப்போன்று ஆச்சரியப்படும் நேர்மையான ஓர் யூதேய ராஜாவைக் குறித்து பழைய ஏற்பாடு அறிவிக்கிறது. அவனுடைய தகப்பனும் தாத்தாவும் விக்கிரக  வழிபாட்டில் திளைத்திருந்தனர். யோசியா ஆட்சிக்கு வந்து எட்டு வருடங்களில், “தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட” ஆரம்பித்தான் (2 நாளாகமம் 34:3). “ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு” கட்டளையிட்டான். பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆலயத்திலிருந்து நியாயப்பிரமாண புத்தகத்தை கண்டெடுக்கின்றனர் (பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள்) (வச. 14). பின்பு தேவன் யோசியாவின் ஆவியை எழுப்பி, தேசத்தின் மக்களை அவர்களின் முற்பிதாக்களின் தேவனுக்கு நேராய் திரும்பும்படி செய்தார். யோசியா “உயிரோடிருந்த நாளெல்லாம்” (வச. 33) மக்கள் கர்த்தரை சேவிக்கும்படி செய்தான். 

கற்பனை செய்துபார்க்க முடியாத இரக்கங்களினால் நிரப்பகிறவர் நம் தேவன். வாழ்க்கையின் சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் சிறப்பான நன்மை ஒன்றை ஆச்சரியப்படும் வகையில் பூக்க வைக்க அவரால் முடியும். அவரை நோக்கிப் பாருங்கள். அதை இன்றும் அவரால் செய்யமுடியும். 

சுவிசேஷத்தின் வல்லமை

பண்டைய ரோமாபுரிக்குக்கென்று ஒரு “சுவிசேஷம்” இருந்தது. வெர்ஜில் ஸியூஸ் என்னும் கவிஞர், தேவர்களுக்கெல்லாம் தேவன், முடிவில்லாத ஒரு ராஜ்யத்தை ரோமர்களுக்கு கொடுத்துள்ளார் என்று கூறுகிறார். தேவர்கள் அகஸ்து ராயனை தேவ குமாரனாகவும், உலக இரட்சகராகவும், அமைதியும் செழிப்பும் நிறைந்த பொற்காலத்தை உலகத்திற்கு கொடுக்கப்போகிறவராகவும் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதே அந்த சுவிசேஷம். 

ஆனால் இந்த சுவிசேஷம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ரோம இராணுவத்தின் அடக்குமுறையும் உயிர்சேதங்களும் இந்த சுவிசேஷத்தை வரவேற்புடையதாய் மாற்றவில்லை. அகஸ்துராயனின் சாம்ராஜ்யம் சட்டவிரோதமாக மக்களை அடிமைப்படுத்தி, ஆளும் வர்க்கம் மட்டுமே திருப்தியடைந்திருக்கும்படி செய்தது. 

இந்த சூழ்நிலையிலிருந்தே பவுல் தன்னை கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளுகிறான் (ரோமர் 1:1). இந்த சூழ்நிலையில் நின்றே இயேசு என்ற பெயரை பவுல் ஒரு காலத்தில் வெறுத்தான். தன்னை யூதருக்கு ராஜா என்றும் உலக இரட்சகர் என்றும் இயேசு அறிவித்ததற்காய் பாடுகள் அனுபவித்ததும் இதே சூழ்நிலையில் தான். 

இந்த நற்செய்தியையே பவுல் ரோமருக்கு எழுதின நிருபத்தில் பகிர்ந்து கொள்ளுகிறார். இந்த சுவிசேஷத்தை “விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோமர் 1:16). ஆம்! ராயனின் ஆளுகையில் உபத்திரவப்படும் மக்களுக்கு இது எவ்வளவு அவசியம்! சிலுவையிலறையப்பட்டு, பின் உயிர்தெழுந்து, தன் அன்பை பிரதிபலித்து சத்துருக்களை வென்ற இரட்சகரின் சுவிசேஷ செய்தி இங்கு பிரசங்கிக்கப்பட்டது. 

நல்ல முடிவு

என்னுடைய கணவரும் மகனும் தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றி தங்களுக்கு பிடித்தமான திரைப்படம் ஏற்கனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். அதின் கடைசி காட்சிகளை பார்க்கும்போதே, அடுத்த படத்தைத் தேட ஆரம்பித்தனர். அவர்களுக்கு பிரியமான எட்டு படங்களை கண்டுபிடித்தனர். பொறுமையிழந்த நான், ஏன், ஏதாவது ஒரு படத்தை தேர்வுசெய்து அதை முதலிலிருந்து பார்க்கலாமல்லவா என்றேன். அதற்கு என் கணவர், “நல்ல முடிவுக் காட்சி யாருக்கு தான் பிடிக்காது?” என்று புன்முறுவலோடு சொன்னார். 

நானும் எனக்கு பிடித்தமான புத்தகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் நல்ல முடிவை எதிர்பார்த்து தான் காத்திருப்பேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். என் வேதாகமத்திலும், எனக்கு பரீட்சையமான, பிடித்த கதைகள், எளிதில் புரியும் வேதப்பகுதிகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் ஜீவனுள்ள வார்த்தைகள் அனைத்தையும் கொண்டு பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையை மறுரூபமாக்கி, கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களின் வாழ்க்கையின் முடிவு சம்பூரணமாயிருக்கும் என்று உறுதியளிக்கிறார்.

“நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” என்று கிறிஸ்து கூறுகிறார் (வெளி. 22:13). மேலும் அவர், அவருடைய ஜனங்கள் நித்திய வாழ்;க்கையை சுதந்தரிப்பர் என்றும் (வச. 14), “இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை” (வச. 18-19) கூட்டவும் குறைக்கவும் கூடாது என்றும் கூறுகிறார். 

வேதத்திலுள்ள எல்லா காரியங்களையும் நாம் அறிந்துகொள்வது முடியாமல் இருக்கலாம். ஆனால் இயேசு தான் சொன்னபடி நிச்சயமாய் திரும்பி வருவார் என்பதை அறிந்திருக்கிறோம். அவர் பாவத்தை அழித்து, கோணலானவைகளை நேராக்கி, எல்லாவற்றையும் புதிதாக்கி, நம்முடைய அன்புள்ள ராஜாவாய் என்றும் அரசாளுகிறார். இது தற்போது நம்மை புதிய ஆரம்பத்திற்குள் நடத்தும் அழகான முடிவு!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

பொய்களும் உண்மையும்

 

அடால்ஃப் ஹிட்லர், சிறிய பொய்களைவிட பெரிய பொய்கள் சக்திவாய்ந்தவை என்று நம்பினார். மேலும் அவர் தனது கோட்பாட்டை வெற்றிகரமாக பரிசோதித்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பத்தில், அவர் மற்றவர்களின் கருத்துக்களை ஆதரிப்பதில் திருப்தி அடைவதாகக் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்ததும், யாரையும் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் தனது கட்சிக்கு இல்லை என்றார். பின்னர், ஊடகங்களை பயன்படுத்தி தன்னை தகப்பனாகவும் ஒழுக்க நெறியாளராகவும் சித்தரித்தார்.

சாத்தான் நம் வாழ்வில் வல்லமை பெற பொய்களைப் பயன்படுத்துகிறான். அனைத்து தருணங்களிலும், அவன் பயம், கோபம் மற்றும் விரக்தியைத் தூண்டுகிறான். ஏனெனில் அவன் “பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாய்” இருக்கிறான் (யோவான் 8:44). சாத்தானால் உண்மையைச் சொல்லமுடியாது, ஏனென்றால் இயேசு சொன்னதுபோல், அவனுக்குள் எந்த உண்மையும் இல்லை.

சாத்தானின் பொய்களில் சிலவைகள் இங்கே. முதலில், நமது பிரார்த்தனைகள் முக்கியமில்லை என்பதே. “நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும்பெலனுள்ளதாயிருக்கிறது” (யாக்கோபு 5:16) என்று வேதம் சொல்லுகிறது. இரண்டாவது பொய், “நாம் சிக்கலில் இருக்கும்போது, அதிலிருந்து வெளியேற வழியே இல்லை” என்பதே. இதுவும் தவறானது. “தேவனாலே எல்லாம் கூடும்” (மாற்கு 10:27) என்றும் “சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரிந்தியர் 10:13) என்றும் வேதம் வாக்களிக்கிறது. மூன்றாவதாக, “தேவன் நம்மை நேசிப்பதில்லை” என்னும் பொய். அது உண்மையல்ல. நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள “தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாது” (ரோமர் 8:38-39).

தேவனுடைய சத்தியம் பொய்யைவிட சக்தி வாய்ந்தது. இயேசுவின் போதனைக்கு நாம் அவருடைய வல்லமையில் கீழ்ப்படிந்தால், நாம் “சத்தியத்தை அறிவோம்”, பொய்யானதை நிராகரிப்போம். “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” (யோவான் 8:31-32). 

 

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. 

 

சரியாய் எதிர்வினையாற்றுங்கள்

கௌரவால் தன் கண்களை நம்ப முடியவில்லை. "அவர்கள் ஏன் இந்த வெள்ளை உடையில் இருக்கும் நல்ல மாமாவை அடிக்கிறார்கள்" என்று எண்ணினான். அவன் இயேசுவைப் போல உடையணிந்த ஒரு நபர் தெருக்களில் ஊர்வலமாகச் செல்வதையும் , போலி இரத்தம் சொட்டச் சொட்டவும், வீரர்களைப் போல உடையணிந்தவர்களால் சாட்டையால் அடிக்கப்படுவதையும் கண்டான். அது ஒரு சபையின் புனித வெள்ளி பவனி. ஆனால் அந்த காட்சி கௌரவுக்கு மிகவும் நிஜமாக இருந்தது. கௌரவ் ஒரு மனநலிவு நோயாளி, மேலும் அவனது நிலை அவனை மிகவும் ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் இருக்கும்படி செய்தது. அம்மாவின் புடவையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு, “அம்மா, தயவு செய்து அவர்களை நிறுத்தச் சொல்லுங்கள்!” என்று புலம்பியபடியே அவன் இதயம் இரக்கத்தால் நிறைந்தது.

கௌரவரைப் போல இரக்கமுள்ளவர்களாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம். சிலருக்கு எளிதில் இரக்கம் உண்டாகலாம் என்றாலும், மற்ற நமக்கோ அதைப் பயிற்சி செய்ய வேண்டும். கொலோசெ சபையினர்க்கு தங்கள் பழைய வாழ்க்கை முறையை "அகற்ற" வலுவாக வலியுறுத்தப்பட்டது. அழுக்காகவும் கந்தையாகவும் இருந்த ஆடையைத் தூக்கி எறிவது போல, கோபம், மூர்க்கம் , பொறாமை, வாயில் பிறக்கலாகாத தூஷணம், வம்பு வார்த்தைகள் (வ.8) ஆகியவற்றைக் கொண்டிருந்த தங்கள் உலகத்துக்குரிய சுபாவத்தைக் களைந்துவிடும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாறாக, இரக்கம், தயவு, மனத்தாழ்மை மற்றும்நீடிய பொறுமை (V.12)ஆகிய நற்பண்புகளை அணிந்துகொள்ள அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர், அவை " இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும்" (சங்கீதம் 145:8). கொண்ட தங்கள் சிருஷ்டிகரைப் பிரதிபலிக்கின்றன.

இரக்கம், கருணை, தாழ்மை மற்றும் தயவு ஆகியவை இன்றைய உலகில் பெரும்பாலும் பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் இதைத்தான் மற்றவர்கள் நம்மில் பார்க்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் (வ.12). சக பணியாளர்கள், அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனான நமது அனுதின உறவுகளில் இந்த குணாதிசயங்களுடன் செயல்படுவது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் சூழ்நிலைகள் எப்படிப்பட்டதாயினும் நாம் சரியாக எதிர்வினையாற்ற உறுதிகொள்ள வேண்டும், ஏனெனில் இந்த வழிமுறையில்தான் நாம் கிறிஸ்துவின் சீடர்கள் என்பதை உலகம் அறியும் ரெபேக்கா விஜயன்